டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பெயரை கேட்டாலே பேட்ஸ்மேன்கள் மனதில் அச்சம் ஏற்பட்டதென்றால் அந்த வீரரின் பெயர் தென் ஆப்பிரிக்கா வேகப்புயல் டேல் ஸ்டெயின். கடந்த 30 வருடங்களில் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை யாராவது தேர்வு செய்தால் அதில் ஸ்டெயின் பெயர் நிச்சயம் இடம்பெறும். ஆடிய அனைத்து போட்டிகளிலும் இவர் தனது தடத்தைப் பதிக்காமல் சென்றதில்லை.

Advertisement

பந்துவீசுவதற்கு ஸ்டெயின் ஓடிவரும் 14 அடிகளில், முதல் நான்கு அடிகளில் இரு கைகளிலும் பந்து இருக்கும், பின்னர் அடுத்த நான்கு அடிகளில் வலது கைகளுக்குள் பந்து செல்லும், கடைசி ஆறு அடிகளில் கைகளில் உள்ள பந்து தோளை தொட்டு வீசப்படும்போது பேட்ஸ்மேன்களின் பேட்டை தாண்டி சென்றுவிடும். 2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியில் நிடினி, பொல்லாக் என ஜாம்பவான்கள் நிறைந்திருந்த நேரம். அணிக்குள் வந்த சில போட்டிகளிலேயே ஸ்டெயின் மிகப்பெரிய வீரராக மாறிவிடவில்லை. ஏன், அணியிலிருந்து சில தொடர்களில் கழற்றியும் விடப்பட்டார்.

Advertisement

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக அணிக்குள் நிரந்தர இடமும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் உச்சத்திற்கும் சென்றது. ஜாம்பவான் வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேற, வாய்ப்பு ஸ்டெயினுக்கு வந்தது. சரியான நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பை ஒருவர் தவறவிட்டால், வாழ்வே மாறிவிடும். அதே வாய்ப்பைப் பயன்படுத்தினால்...!

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய வீரர் டேல் ஸ்டெயின். முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது கர்ஜித்த ஸ்டெயினின் பந்துவீச்சு, சில ஆண்டுகளில் துல்லியத்தின் உச்சத்தை தொட்டிருந்தது. அந்த துல்லியம்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவை பதம்பார்த்தது. அணியிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட ஒரு பந்துவீச்சாளர் திரும்பி வந்து பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஸ்பைடர் மேனைப்போல் ஸ்டெயின் முன்னேறினார்.

ஒரே ஒரு ஸ்பெல்லில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மைதானங்களில் ஆட்டத்தை மாற்ற முடியுமா எனக் கேட்போர் ஸ்டெயினின் ஆட்டத்தை கொஞ்சம் திரும்ப பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறை பந்தை கையில் கொடுக்கும் போதும் மேஜிக் நிகழ்த்திக் காட்டியது அந்த தென்னாப்பிரிக்கா வேகப்புயல்.

இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையை 76 ரன்களுக்கு சுருட்டி வீட்டிற்கு அனுப்பியதும் ஸ்டெயின்தான். இன் ஸிவிங்கர் போட போகிறார் என பேட்ஸ்மேன் அறிந்தும் அந்த பந்தை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியாது. அந்த இன் ஸ்விங்கர் நேரடியாக போல்டை முத்தமிட்டு செல்லும்.

Advertisement

நல்ல பேட்ஸ்மேன் என்பவனுக்குள் அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்ற ஈகோ எப்போதும் இருக்கும். ஆனால் ஸ்டெயினிடம் அந்த ஈகோ எல்லாத்தையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் சர்வதேச பேட்ஸ்மேன்கள். 'நான் ஆடிய பந்துவீச்சாளர்களில் ஸ்டெயின் எனக்கு அதிகமான அச்சுறுத்தைகளை கொடுத்துள்ளார்' இந்த வார்த்தைகள் கூறியது கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.

 

சச்சின் டெண்டுல்கரை நாக்பூரில் டெஸ்ட் போட்டியில் திணறடித்துருப்பார் ஸ்டெயின். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் வந்தாலே தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் நேரடியாக பந்தை ஸ்டெயினிடம் கொடுத்துவிடுவார். ஸ்டெயினும் வழக்கம்போல் வாகன் கதையை முடித்து பெவிலியனுக்கு அனுப்புவார். தவிர்க்க முடியாத பந்துவீச்சாளர் என்ற பெயர் 2007ஆம் ஆண்டு இறுதியிலேயே அவருக்கு வந்தது. ஆனால் 2008ஆம் ஆண்டு நம்பர் ஒன் என்ற இடம் ஸ்டெயினிடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

Advertisement

18 வயதில் தனது பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டும் என ஸ்டெயின் இவ்வாறு கூறியிருக்கிறார் “பிரெட் லீ போன்ற ஓட்டம், ஆலன் டொனால்டு போல் பந்துவீச்சு முறையில் பாய வேண்டும், அக்தரை போன்று வேகம் வீச வேண்டும், பொல்லாக்கை போல் துல்லியம் இருக்க வேண்டும்” என்பது தான்.

ஆனால் இன்று வரும் இளம் தலைமுறையினர் ஸ்டெயின் போல் பந்து வீச வேண்டும் என பயிற்சி செய்துவருகின்றனர். இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் டாப் வரிசையில் யாரோடு ஒப்பிட்டாலும் ஸ்டிரைக் ரேட்டில் ஸ்டெயின்தான் முதலிடத்தில் இருப்பார். அது மெக்ராத்தாக இருந்தாலும் சரி, ஆலன் டொனால்டாக இருந்தாலும் சரி...!

ஒரு வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து 8 வருடங்கள் தரவரிசையில் பின் தங்காமல் முதல் இரண்டு இடங்களில் இருந்ததெல்லாம் ஸ்டெயினால் மட்டுமே செய்யப்பட்ட சாகசம். ஸ்டெயின் விக்கெட்கள் வீழ்த்தாத போட்டியை திரும்பி பார்த்தால் அதே ஆக்ரோஷத்தோடு பேட்ஸ்மேன்களின் மனவலிமையை சுக்குநூறாக்கியுள்ளார். ஸ்டெயினிடம் விக்கெட் கொடுத்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில் மற்ற பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கும் ஸ்டெயின் முக்கிய காரணம்.

Advertisement

பல ஜாம்பவான் வீரர்களுக்கு காயம்தான் பெரும் வலி. சர்வதேச கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கையில் தோளில் ஏற்பட்ட காயம் ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிபோட்டது. மீண்டும் கிரிக்கெட் ஆடினாலும் விக்கெட்டுகள் முன்போல் விழவில்லை. அனைத்து வீரர்களுக்கும் இந்த நெருக்கடி காலம் வரும். அந்த நெருக்கடியில் இருந்து யார் மீள்கிறாரோ அவரே வரலாற்றில் இடம்பிடிக்கிறார். ஸ்டெயின் என்னும் புயலும் மீண்டது. 2018ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஷான் பொல்லாக்கின் சாதனையை முறியடித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஸ்டெயினின் முதல் ஸ்பெல்லை எதிர்கொள்ள வேண்டுமே என சர்வதேச வீரர்கள் தூக்கிமின்றி இருந்துள்ளனர். கிட்டதட்ட 93 போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகள். விளையாடிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளர்கள் வேறு யாரும் செய்திடாத சாதனை இது.

அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டேல் ஸ்டேயின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஸ்டெயின் ஓய்வை அறிவித்ததும் கிரிக்கெட் உலகமே சேர்ந்து, “கடந்த 30 ஆண்டுகளில் ஸ்டெயின் போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் உருவாகவில்லை”. வாழ்த்துகள் ஸ்டெயின்; இனியாவது பேட்ஸ்மேன்கள் சிறிது பயமின்றி டெஸ்ட் போட்டிகளில் விளையாடட்டும் என்ற வாசகங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின.

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்டெயின் பேசியபோது, ’தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த நான்கு பந்துவீச்சாளர்கள் பற்றி மக்கள் பேச வேண்டும். அதில் ஆலன் டொனால்ட், நிடினி, பொல்லாக், கடைசியாக எனது பெயரும் இருக்கவேண்டும்’ என்றார்.

அவரது ஆசையும் தற்போது நிறைவேறியுள்ளது. கடந்தாண்டு ஐசிசி வெளியிட்ட ஒரு தசாப்தத்தின் சிறந்த அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்தார். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட உலகின் மிகவும் பிரபலமான வீரர்களை உள்ளடக்கிய டெஸ்ட் அணியிலும் டேல் ஸ்டெயின் தனது இடத்தைப் பதிவுசெய்திருந்தார். 

இப்படி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். #HappyBirthdayDaleSteyn

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News