டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 17) அபுதாபியில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினார். இதன் மூலம் 6 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 66 ரன்களை எடுத்தது.
Trending
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ், 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கானும் அரைசதம் கடந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குர்பாஸ் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 87 ரன்களையும், ஆஸ்கர் ஆஃப்கான் 55 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இமாலய இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர் டினாஷே கமுன்ஹுகாம்வே (Tinashe Kamunhukamwe) மட்டும் அதிரடியாக விளையாடி 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த வீரர்கள் ரஷித் கானின் மாயாஜால சுழலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
இதனால் 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணியால் 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மேலும், இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு,அணியின் வெற்றிக்கும் உதவிய ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now