
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இராண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி 31 ரன்களில் ஆடமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அதிரடி காட்டிய பென் டக்கெட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட்டும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் , ஜஸ்ப்ரித் பும்ராவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதில் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தியதுடன் ஆட்டமிழக்காமல் 148 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.