
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருனரத்னே, ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் 30 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 50 ரன்களை எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரமேஷ் மெண்டிஸ் 14 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.