
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் மற்றும் ஆலி போப் ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (8), ஹாரி ப்ரூக் (9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
அதன்பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் மார்க் உட் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, 51.4 ஓவரில் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஆடுவதை போல அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்து ஆல் அவுட்டானது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் அப்ரார் அகமது அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.