
15ஆவது ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 115 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணியில் ஜித்தேஷ் சர்மா (32), மாயன்க் அகர்வால் (24), ராகுல் சாஹர் (12) மற்றும் சாருக் கான் (12) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டவில்லை.
டெல்லி அணியில் அதிகபட்சமாக கலீல் அஹமத், லலித் யாதவ், அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 41 ரன்களும், டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 10.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.