டி10 லீக்: வாரியர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சென்னை பிரேவ்ஸ்!
நார்த்தன் வாரியர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நார்த்தன் வாரியர்ஸ் அணி சென்னை அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக தரங்கா 32 ரன்களையும், பாவெல் 31 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் காம்பெர், ஷனகா, போபாரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் பனுகா ராஜபக்ஷ, முகமது ஷசாத் இணை அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இதில் ராஜபக்ஷ 55 ரன்களையும், முகமது ஷசாத் 54 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் சென்னை பிரேவ்ஸ் அணி 10 வீக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், இத்தொடரில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது.
Win Big, Make Your Cricket Tales Now