Advertisement

உலகக்கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும் - டேனிஷ் கனேரியா!

அர்ஷ்தீப் சிங் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவும் தகுதியானவராக உள்ளார் என்று டேனிஷ் கனேரியா ஆதரவு தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan July 26, 2022 • 14:23 PM
 Arshdeep Singh can be fantastic option for India in T20 WC and Asia Cup: Danish Kaneria
Arshdeep Singh can be fantastic option for India in T20 WC and Asia Cup: Danish Kaneria (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து த்ரில் வெற்றிகளை சுவைத்த இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி சாதித்துள்ள இந்தியா 2006க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியே அடையாமல் தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று புதிய உலக சாதனையும் படைத்தது.

இதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜூலை 27ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு ஆவேஷ் கானுக்கு அறிமுகப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரும் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக வெறும் 6 ஓவரில் 54 ரன்களை 9.00 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசி வாய்பளித்த அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை பரிசளித்தார்.

Trending


ஆனால் அவருக்கு பதில் பஞ்சாப் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் களமிறங்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்கும் பவுலராக பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை அள்ளி வரும் அவர் கடைசிகட்ட ஓவர்களில் ரபாடா போன்ற வெளிநாட்டு தரமான பவுலர்களை காட்டிலும் அற்புதமாக பந்து வீசுகிறார். அதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் அயர்லாந்து டி20 தொடர் வரை பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்.

அந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரைப் போலவே அசத்திய உம்ரான் மாலிக் விவேகம் இல்லாமல் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசியதால் வந்த வாக்கிலேயே காணாமல் போய்விட்டார். எனவே அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று இடதுகை பந்துவீச்சாளராக இருக்கும் அவருக்கு 3ஆவது போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடைசி போட்டியில் நிச்சயம் களமிறங்கி மிகப்பெரிய தாக்கத்தை அர்ஷிதீப் சிங் ஏற்படுத்துவார் என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனேஷ் கனேரியா அவர் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவும் தகுதியானவராக உள்ளார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள். அர்ஷிதீப் சிங் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார். அவரிடம் தனித்துவமான கலை உள்ளது. அவர் பந்து வீசும்போது தனது அறிவையும் பயன்படுத்துகிறார். எப்படி விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற நுணுக்கங்களையும் அவர் கற்றுள்ளார். 

எனவே இந்திய அணியின் டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு அவர் சிறந்த தேர்வாக உள்ளார். குறிப்பாக துபாயில் நடைபெறப்போகும் ஆசிய கோப்பையில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக அவர் வெற்றிகரமாக செயல்படும் தகுதியும் திறமையும் பெற்றுள்ளார்.

அதேபோல் நடராஜன் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். கடந்த முறை தாக்கத்தை ஏற்படுத்தியது போல் இம்முறையும் அவரால் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவர் மிகச் சிறந்த பவுலர் என்ற நிலைமையில் இந்திய அணியில் நிறைய பவுலர்கள் உள்ளனர். எனவே இந்த திறமையான பவுலர்களை சிறந்த முறையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement