
15ஆவது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை தொடங்கும் சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தலா ஒரு முறை மோதவுள்ளன. இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.