
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தா இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இரு அணிகளும் இத்தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதியதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் சிறப்பாக் விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சாஹிப்சாதா ஃபர்ஹான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சைம் அயூப்பும் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் இந்த போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமானும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய முகமது ஹாரிஸ், கேப்டன் சல்மான் ஆகா, ஹுசைன் தாலத், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.