
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என ஹாரிஸ் ராவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட்டும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர்.