நடைபெற்று முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தவறான தீர்ப்பு கோபமடைந்து ஸ்டம்ப்களை நொறுக்கி நடுவர்களை திட்டிக் கொண்டே சென்றது பெரிய சர்ச்சையை உண்டாக்கி கடைசியில் 2 போட்டிகளில் விளையாட தடையை பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போது உள்ளூர் தமிழக தொடரில் நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பேட்ஸ்மேன் கொந்தளித்த தருணம் அரங்கேறியுள்ளது.
அதாவது தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய அசோசியேசன் சார்பில் டிவிசன் 1 உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஜாலி ரிவர்ஸ் மற்றும் எங் ஸ்டார் கிளப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாலி ரிவர்ஸ் நிர்ணயித்த 164 ரன்களை துரத்திய எங் ஸ்டார்ஸ் அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பாபா அபாரஜித் சக வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து நங்கூரமாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்து வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக சுதர்சனுடன் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தம்முடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அவர் ஹரி நிஷாந்த் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்டார். இருப்பினும் பிட்ச்சான பின் திடீரென சுழன்று உள்ளே வந்த பந்தை சரியாக கணிக்க தவறிய அவருடைய காலில் பட்ட பந்து ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த கங்கா ஸ்ரீதர் ராஜுவிடம் சென்றது. அதை தரையோடு தரையாக தாவி பிடித்த ஸ்ரீதர் ராஜு மற்றும் அவருடைய அணியினர் அவுட் கேட்ட போது நடுவர் கையை உயர்த்தினார். ஆனால் எல்பிடபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்த நிலையில் பந்து தம்முடைய பேட்டில் பட்டிருக்கும் என்று நினைத்த அபாரஜித் ஃபீல்டர் சரியாகப் பிடிக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.