
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்தனர். இதன்மூலம் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிஷன் மதுஷ்கா 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.