
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்தானது.
இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. அப்போது ரத்தான 5ஆவது டெஸ்ட் விளையாடப்படும் என அறியப்பட்டது. இந்நிலையில் ரத்தான டெஸ்டுக்குப் பதிலாகக் கூடுதலாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ முன்வந்துள்ளது.