
ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள், மெகா ஏலம் என பல்வேறு மாற்றங்கள் வரவிருப்பதாக எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. வரும் பிப்ரவரி 12 மற்றும்13ஆம் தேதிகளில் மெகா ஏலத்தை நடத்திவிட்டு, ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆவது வாரத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த முறையும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே "ப்ளான் பி" என்னவென்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. வழக்கம் போல அமீரகத்திற்கு செல்வது தான் முதன்மை தேர்வாக இருந்தது.
இந்நிலையில் அதில் தான் ட்விஸ்ட் வைத்துள்ளது பிசிசிஐ. இந்த முறை முழு ஐபிஎல் போட்டிகளையும் தென் ஆப்பிரிக்க நாட்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்தை எதிர்நோக்கி இருந்தால் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதால் இந்த முறை மாற்றம் ஏற்படுத்த முயற்சித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அமீரகத்தை விட தென் ஆப்பிரிக்காவில் கூடுதல் பாதுகாப்பும், வீரர்களின் மனநிலையும் சீராக இருக்கும் எனத்தெரிகிறது.