
இந்திய டெஸ்ட் அணியில் தற்போது பந்துவீச்சாளர் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அயல் நாடுகளில் பேட்டிங் தான் தற்போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே தொடக்க வீரர்களுக்கான இடம் அவ்வப்போது மாறிக் கொண்டே வரும் வேளையில் கோலியும் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்னும் அவரிடம் இருந்து ஒரு பெரிய ரன் குவிப்பு இதுவரை வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசாமல் இருந்து வருகிறார்.
அதோடு மிகப்பெரிய வேதனைக்குரிய விசயமாக புஜாராவின் பேட்டிங் ஃபார்ம் அமைந்துள்ளது. ஏனெனில் கடைசியாக அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 ரன்கள் மட்டுமே சராசரியாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் ஒரு சதம் கூட விளாச வில்லை. நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
இந்நிலையில் 33 வயதான இவர் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவரது பேட்டிங் ஏமாற்றத்தையே தந்தது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்டில் அவரை விளையாட வைக்கக்கூடாது என்றும், அவருக்கு பதிலாக இளம் வீரரான சூர்யகுமார் யாதவை விளையாட வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராடு ஹாக் கூறியுள்ளார்.