
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடந்ததாகக் கூறப்படும் விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவில் சூதாட்ட நெட்வொர்க் செல்வாக்கு செலுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
"ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தின் போர்வையில், பொது மக்களை சூதாட்டத்திற்கு தூண்டி ஏமாற்றியுள்ளனர்.” என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக சில வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலி அடையாளங்கள் மற்றும் கேஒய்சி ஆவணங்களுடன் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த புதிய வங்கிக் கணக்குகள் பிறந்த தேதிகள் உள்ளிட்ட போலி விவரங்களைக் கொண்டு வங்கி அதிகாரிகளால் உரிய கவனம் செலுத்தாமல் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“இதுபோன்ற சூதாட்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, ஹவாலா பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. தகவல்களின்படி, இந்த சூதாட்ட நெட்வொர்க் 2013 முதல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது, ” என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.