
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் தற்பொழுது துபாயில் இன்று நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக சரியான விலைக்கு வீரர்களை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நடந்து முடிந்த ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை ரூ.1.80 கோடிக்கு வாங்கியது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும், நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கும் வாங்கி அசத்தியது.
அதே சமயத்தில் எப்பொழுதும் அனுபவ வீரர்களின் மேல் முதலீடு செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்த முறை புதிய அணுகுமுறை உடன், 20 வயதான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு மேல் கொடுத்து எடுத்து ஆச்சரியப்படுத்தியது. அம்பதி ராயுடுக்கான இடத்தை நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முழுவதுமாக இன்று ஏலத்தில் செயல்பட்டது.