Advertisement

தொடரும் ஃபார்ம் அவுட்; மூத்த வீரர்களுக்கு சிக்கல்!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 03, 2022 • 20:15 PM
Cheteshwar Pujara, Ajinkya Rahane Have One More Innings to Save Their Test Careers
Cheteshwar Pujara, Ajinkya Rahane Have One More Innings to Save Their Test Careers (Image Source: Google)
Advertisement

இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.

Trending


தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகாவது இருவரின் பேட்டிங்கிலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

ரஹானே, புஜாரா இருவருமே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. புஜாரா (0,16) ரஹானே (48, 20) என ரன்கள் சேர்த்தனர். ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானே டக்அவுட்டிலும், புஜாரா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறி தாங்கள் ஃபார்மில் இல்லை என்பதை உணர்த்திவிட்டனர்.

2ஆவது டெஸ்ட் போட்டியில் இருவருமே தென் ஆப்பிரிக்க வீரர் ஒலிவரின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தனர். ரஹானே, புஜாரா ஆட்டமிழந்த விதம் ஏறக்குறைய ஒன்றுதான். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்ற பந்தைக் கை தூக்கி லீவ் செய்யாமல் அதைத் தேவையில்லாமல் தொட்டு ரஹானே ஆட்டமிழந்தார்.

அவுட்சைட் ஆஃப் சென்ற பந்தை டிபெண்ட் செய்ய முற்பட்டு புஜாரா விக்கெட்டைப் பறிகொடுத்தார். உண்மையில் மூத்த வீரர்களாக இருக்கும் இருவருக்குமே எந்தப் பந்தை லீவ் செய்ய வேண்டும், டிபெண்ட் செய்யவேண்டும் எனத் தெரியவில்லையா, அல்லது தெரிந்தே தவறு செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், இருவரும் நிச்சயமாக ஃபார்மில் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரை சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்காமல் மூத்த வீரர் எனும் அட்டையுடன் அணிக்குள் இருக்கும் இருவரும் தேவையா என்பதை பிசிசிஐ யோசிக்கும் நேரம் வந்துவிட்டது.

ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா, ஷுப்மான் கில், பஞ்ச்சல் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கி வீணடிக்க வேண்டும். முச்சதம் அடித்த கருண் நாயர் கண்டுகொள்ளப்படாமல், வாய்ப்பு தராமல் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே வீணடிக்கப்பட்டதற்கு இதுபோன்ற மூத்த வீரர்கள் அணியை விட்டு நகராமல் இருந்ததுதான் முதல் காரணம். அதுபோன்று ஸ்ரேயாஸ் அய்யரின் வாழ்க்கையும் அமைந்துவிடக்கூடாது.

இதனால் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் இருவரையும் இனியும் அணியில் நீடிக்க வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement