
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டி20 கிரிக்கெட் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளும் தங்களது சொந்த டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாக இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இதனைப் பின் பற்றி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் லீக் தொடர்களை நடத்தி வருகிறது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் சிபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 12ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியளுக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நடப்பு சிபிஎல் தொடரில் செயின்ட் லூசிய கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென், தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.