
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அடுத்த ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் நீடிக்கவில்லை.
இதில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களைச் சேர்த்த தன்ஸித் ஹசனும், அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 35 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜக்கர் அலியும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோஹித் சர்மா தவறவிட்டதன் காரணமாக் அக்ஸர் படேலின் ஹாட்ரிக் விக்கெட் கனவும் தகர்ந்தது.