
ஐபிஎல் தொடரின் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடி வருகிறார்கள் என்ற பார்வை இருந்து வருகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் மோசமாக சொதப்பி வந்தனர். இதில் அனைவருமே ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி கம்பேக் கொடுத்ததால் பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. பேட்டிங்கை போன்று பந்துவீச்சிலும் உதவுவார் என்ற காரணத்தினால் தான் அவர் அணிக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் ஐபிஎல்-ல் அவர் ஒரு பந்துகூட வீசவில்லை. பேட்டிங்கிலும் கடைசி வரை தனது திறமையை அவர் நிரூபிக்கவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரில் யாரையாவது ஒருவரை மெயின் அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.