
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 2 ரன்களிலும், நிஷன் மதுஷ்கா 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து 24 ரன்களில் குசால் மெண்டிஸும் , 17 ரன்களில் தினேஷ் சண்டிமாலும், 12 ரன்களில் குசால் மெண்டிஸும், 10 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யாவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.