
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது டெல்லி அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 36 ரன்கள், அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்ஸரை பொவேல் பறக்கவிட போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.
மெக்காய் வீசிய 3வது பந்து, பேட்ஸ்மேன் நெஞ்சு வரை வந்ததால், இதனை 'நோ பால்' என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார். ஆனால், அது 'நோ பால்' இல்லை என்று நடுவர் சொல்ல, கடுப்பான டெல்லி அணி, பயிற்சியாளரை மைதானத்துக்குள் அனுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து கேப்டன் ரிஷப் பந்த், டெல்லி அணியின் வீரர்களை ஆட்டத்தை நிறுத்திவிட்டு வருமாறு கூறினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இதனையடுத்து நடுவர்கள் டெல்லி அணியை சமாளிக்க, மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது.