
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரு உயர்ந்தது. இதில் பில் சால்ட் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸார்களுடன் 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்து 16 ரன்களில் சதமடிக்கு வாய்ப்பை தவறவிட்டார்.