
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் டேவிட் மாலன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 59 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 60 ரன்களுக்கு ஜோ ரூட்டும் ஆட்டமிழந்தார்.