
பாகிஸ்தான் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் 8 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 ரன்களிலும் விக்கெட்டை இழக்க அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை டேனியல் வையட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேனியல் வையட் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 12 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி ஒரு ரன்னிலும், டேனியல் கிப்சன் 13 ரன்களிலும், எமி ஜோன்ஸ் 26 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் டையான பைக் மற்றும் கேப்டன் நிதா தார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.