
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து இத்தொடரை வெற்றிகரமாக தொடக்கிய அந்த அணி இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.
அதன் பின் ஆஸ்திரேலியாவிடமும் அடிவாங்கி தோற்ற அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை பதிவு செய்து மற்றுமொரு அவமானத்தையும் சந்தித்தது. அதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி சென்னை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று வங்கதேசத்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் எஞ்சிய போட்டிகளில் வெல்வதுடன் இதர அணிகள் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்வி தங்களுடைய வெற்றிப் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 4 தொடர்ச்சியான தோல்விகளில் சந்திக்க முக்கிய பங்காற்றியதாக ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார்.