யுஏஇ-க்கு மாற்றப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக்
இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, நடப்பு சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மைதான வளாகத்திற்குள் ஒரு ட்ரோன் விழுந்ததை அடுத்து அவசரக் கூட்டம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் திட்டமிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெற இருந்த மற்ற அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இத்தொடரின் எஞ்சிய போட்டிக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிசிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிவுள்ள பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, “பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் மன நலனை உறுதி செய்ய நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த காலங்களைப் போலவே, போட்டியின் சிறந்த நலன்களை மேம்படுத்த எங்கள் பங்குதாரர்கள் எங்களுடன் அணிதிரள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அத்துடன் எங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் துணை நிற்பார்கள் என்று நம்புகிறோம். லீக் தொடர்ந்து செழிக்கப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2016, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு பிறகு, வங்கதேச அணியானது ஐந்து டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயானா இந்த தொடரானது எதிர்வரும் மே 25 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now