
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசால்டாக அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? என முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணமே இல்லாமல் தீபக் ஹூடா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் முடிவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
அதே போல் முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டதையும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃபும், முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டதை விமர்சித்துள்ளார்.