
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் 3 அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா (17), ஷிகர் தவான்(1) மற்றும் விராட் கோலி(17) ஆகிய மூவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமாரும் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 72 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.
அதன்பின்னர் ரிஷப் பந்தும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடிக்க, 5ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 133 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், ஹர்திக் பாண்டியா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ரிஷப் பந்த் 125 ரன்களை குவித்து, கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.