டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து போட்டிக்கு தயாரான ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் 2ஆவது போட்டியில் நியூசிலாந்தை வருகிற 31ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்த்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் பந்து பட்டது. இதனால் காயம் அடைந்து இருப்பாரோ என்ற அச்சத்தில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு எந்த காயமும் இல்லை என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் விளையாட அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்த்திக் பாண்டியா கருதப்படுகிறார். இதையடுத்து அவரை பந்து வீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி இந்திய அணியின் ஆலோசகர் மகேந்திர சிங் தோனியின் பார்வையில் அவர் கடந்த 2 தினங்களாக பந்துவீசி வருகிறார். மேலும் அவரது உடற்தகுதியையும் பெற்றுள்ளதால் நிச்சயம் அவரால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “ஹர்திக் பாண்டியாவின் உடல் நிலையில் முன்னேற்றமடைந்து வருகிறது. அதனால் இந்தப் போட்டியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எங்களுக்காக குறைந்தபட்சம் இரண்டு ஓவர்கள் வீசத் தயாராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now