பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சேனுரன் முத்துசாமி 89 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், காகிசோ ரபாடா 71 ரன்களையும், டோனி டி சோர்ஸி 55 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத், சௌத் ஷகீல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களைச் சேர்த்திருந்தது இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை பாபர் ஆசாம் 49 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 16 ரன்களுடனும் தொடர்ந்தனர்.