
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. அதை நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் போன்ற நல்ல திறமையுடைய வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் எதிர்கொள்வதால் இது தொடர்பாக இரு நாட்டுகளை ரசிகர்களிடமும்ம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது
இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே இல்லாத நிலைமையில் கேப்டன் ஷிகர் தவான் முதல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அவருடன் ஜோடியாக களமிறங்க இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கைக்வாட் போன்ற வீரர்களுடன் சமீபத்திய அயர்லாந்து தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி பட்டைய கிளப்பி சதமடித்த தீபக் ஹூடாவும் போட்டியில் உள்ளார். இப்படி ஷிகர் தவானுடன் களமிறங்க 4 வீரர்கள் போட்டி போடுவதால் அதில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் சமீப காலங்களில் தேர்வுக் குழுவால் அநீதி இழைக்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதற்கு முந்தைய காலங்களில் நிறைய போட்டிகளில் தீபக் ஹூடா மிடில் ஆர்டரில் விளையாடியதால் இத்தொடரில் அவருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் விராட் கோலி இல்லாததால் அவரின் இடத்தில் சுப்மன் கில் பொருந்துவார் என்ற நிலைமையில் சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய இஷான் கிசான் விக்கெட் கீப்பராகவும் தொடக்க வீரராகவும் ஷிகர் தவானுடன் களமிறங்குவதற்கே வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.