நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் - அஜிங்கியா ரஹானே!
இத்தொடரில் எங்களுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போது இரண்டு போட்டியில் இரண்டையும் நாம் வெல்ல வேண்டும் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும், மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் டெவால்ட் பிரீவிஸ் 52 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியில் எம் எஸ் தோனி 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, “தோல்வியடைந்த அணியில் இருப்பது கடினமான விஷயம், நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட்டில் 185-195 ரன்கள் ஒரு சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இது ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது. மேலும் அவர்கள் மிகவும் நன்றாக பேட் செய்தனர் மற்றும் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன்.
Also Read: LIVE Cricket Score
பிரேவிஸ் மற்றும் துபே ஆகியோர் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர், அது அவர்களுக்கு பலனளித்தது. இந்த ஆட்டத்தில் எங்களுடை பந்துவீச்சாளர்கள் மீது எந்த புகாரும் இல்லை, அனைவரும் மிகவும் நன்றாக பந்து வீசினர் என்று நான் நினைக்கிறேன். இத்தொடரில் எங்களுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போது இரண்டு போட்டியில் இரண்டையும் நாம் வெல்ல வேண்டும், இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now