
கிரிக்கெட் உலகத்தில் எந்த அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கும் இல்லாத வணிக ரீதியான மதிப்பும் உணர்வு ரீதியான பெருக்கமும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு உண்டு. இது இரு நாடுகளும் இருநாட்டில் ஏதாவது ஒரு நாட்டில் விளையாட வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் நாட்டிலும் இந்த இரண்டு அணிகள் விளையாடினாலும் மைதானம் ரசிகர்களால் நிரம்புவது உறுதி.
அதேபோல் போட்டி எந்த நேரத்தில் பார்க்கக் கிடைத்தாலும், இருநாட்டின் ரசிகர்களும் முழுவதுமாக பார்ப்பதும் உறுதி. இந்த நிலையில் அரசியல் காரணங்களால் இரண்டு அணிகளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சிலபல காலமாக கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகள் மோதிக் கொள்ளும் போட்டி எப்போவாதுதான் நடக்கிறது. எனவே இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு தரும் முக்கியத்துவம் என்பது வேறொரு உயரத்திற்கு சென்று விட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இருந்து வரும் இஃஃப்திகார் அகமத் பரபரப்பான புகார் ஒன்றை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார். அந்தப் புகாரை அவர் எலான் மஸ்க் ஐடியை குறிப்பிட்டு புகார் செய்திருக்கிறார். நவாஸ் என்கிற பெயருடைய ட்விட்டர் ஐடி இப்திகார் அகமது கூறியது போல “இந்தியாவுடன் விளையாடுவது தெரு குழந்தைகளுடன் விளையாடுவது போலானது” என்கின்ற ஒரு தவறான தகவலை பதிவு செய்திருந்தார்.