
இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் அனைத்து துறைகளிலும் அளவு கடந்த போட்டி இருப்பது சாதாரணமான ஒன்றாகும். குறிப்பாக கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பையிலேயே 38 அணிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டி போடுவதால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 1 இடத்திற்கு ஏராளமான வீரர்கள் போட்டி போடுவது சகஜமாகி விட்டது.
அதனால் சில வீரர்கள் திறமை இருந்தும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் அதிர்ஷ்டம் இல்லாததால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதைவிட தற்போதைய நவீன கிரிக்கெட்டில் 30 வயதை தாண்டிவிட்டால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவ்வளவுதான் என்ற எழுதப்படாத விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் சீனியர் அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முகமது சமி, ஷிகர் தவான் போன்ற வீரர்கள் 30 வயதை தாண்டி விட்டதால் வெளிப்படையாகவே அவர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களை விட 30 வயதை தாண்டி விட்டதால் இந்தியாவுக்காக மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்கும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்த ஒரு வீரர் தான் ஷெல்டன் ஜாக்சன் ஆவார்.