
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஈயன் மோர்கன் - மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மஸ்டர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்கம், அவரைத்தொடர்ந்து ஈயான் மோர்கனும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆம்ப்ரோஸ் - மட்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆம்ப்ரோஸ் 23 ரன்களிலும், மட்டி 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டிம் பிரஸ்னன், கிறிஸ் ட்ரெம்லெட் ஆகியோர் 16 ரன்களையும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்தது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், அபிமன்யூ மிதுன் மற்றும் பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.