
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது.
அதன்படி இன்று குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இதிய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் மயங்க் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைனும் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 14 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் - தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 12 ரன்களில் ஹிரிடோய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா மற்றும் ஜக்கார் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.