
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே” போட்டியாக 26ஆஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே ரோஹித், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.
அதேவேளையில் மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. மேலும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் எந்த மாற்றங்கள் இருக்கும் என்றும், யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.
அந்த வகையில் காயமடைந்த ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ராகுலுடன் மாயங்க் அகர்வால் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில் ரஹானே இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.