
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ர கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் விளையாடிய உமா சேத்ரி 4 ரன்னில் விக்கெட்டி இழக்க, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13 ரன்னிலும், ராகவி பிஸ்ட் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தீப்தி சர்மா 17 ரன்களுக்கும், சஜீவன் சஜனா 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.