
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி வரும் மே 29ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிதாக 2 அணிகள் புதிதாக பங்கேற்பதையடுத்து, 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.
இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பார்மட் அடிப்படையில் லீக் சுற்றில் மோதவுள்ளன. இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது மற்றும் எத்தனை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் 4 கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.