
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது.
இதில் ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்தியப் பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. போட்டியின் ஆணையராகப் பணியாற்றினார்.