ஐபிஎல் 2022: ஒரே சீசனில் ஆயிரம் சிக்சர்கள்; வியப்பில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஒரே சீசனில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே நான்கு அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி, தோல்விகளால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படாது என்ற நிலையிலும், பலரும் இப்போட்டியை ஆவலோடு கண்டுகளித்துள்ளனர். மேலும், இப்போட்டியில் இரண்டு மெகா சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா 43 (32) சிறப்பாக விளையாடிய நிலையில், அடுத்து ராகுல் திரிபாதி, ஐய்டன் மார்க்கரம், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ செய்பர்ட் ஆகியோர் தலா 20+ ரன்களை அடித்தார்கள். இதனால், சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 157/8 ரன்களை சேர்த்து அசத்தியது.
Also Read
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோ 23 (15), ஷிகர் தவன் 39 (32) ஆகியோர் சிறப்பான துவக்கம் தந்தார்கள். தவன் இப்போட்டியில் இரண்டு பவுண்டரிகளை அடித்ததன் மூலம், ஐபிஎலில் 700 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்களை குவித்து அசத்தினார். ஜிதேஷ் ஷர்மா 7 பந்துகளில் 19 ரன்களை விளாசியதால், பஞ்சாப் அணி 15.1 ஓவர்கள் முடிவில் 160/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் பஞ்சாப் அணி, ஐபிஎலில் 4ஆவது முறையாக 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இப்போட்டியில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் மூலம், இந்த சீசனில் மட்டும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சீசனிலும் இத்தனை சிக்ஸர்கள் பறந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now