
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (7) மற்றும் மேத்யூ வேட் (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சாய் சுதர்சன் 11 ரன்னிலும், மந்தமாக ஆடிய டேவிட் மில்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
குஜராத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. அதை சமாளித்து அருமையாக பேட்டிங் ஆடினார் ஹர்திக் பாண்டியா. அவருடன் இணைந்து அபினவ் மனோகரும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 21 பந்தில் 35 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழக்க, 42 பந்தில் அரைசதம் அடித்தார் ஹர்திக் பாண்டியா.