Advertisement

ஐபிஎல் 2022: இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பந்துவீச்சில் பதிலளிக்கும் சாய் கிஷோர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக வீரர் சாய் கிஷோர் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 20, 2022 • 19:02 PM
IPL 2022: spinner who returned with impressive figures on GT debut against LSG
IPL 2022: spinner who returned with impressive figures on GT debut against LSG (Image Source: Google)
Advertisement

இரண்டு வருடங்களுக்கு முன்பே ஐபிஎல் அணியில் இடம்பெற்றவர் தமிழக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர். 2020 ஐபிஎல் ஏலத்தில் சாய் கிஷோரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த வருடம் சிஎஸ்கே மோசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடம் பிடித்தும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

அடுத்த இரு வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் இன்னும் அதிகமாகத் திறமையை நிரூபித்தார் சாய் கிஷோர். இதனால் இந்திய அணிக்கும் தேர்வானார். அங்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. 

Trending


ஐபிஎல் 2022 ஏலத்தில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய அதிக அணிகள் போட்டியிட்டதில் சாய் கிஷோரும் உள்ளார். தீபக் ஹூடா, சாய் கிஷோர், டிம் டேவிட் என மூன்று வீரர்களையும் தேர்வு செய்ய அதிகபட்சமாகத் தலா 6 அணிகள் போட்டியிட்டன. சாய் கிஷோர் ரூ. 3 கோடிக்கும் டிம் டேவிட் ரூ. 8.25 கோடிக்கும் தீபக் ஹூடா ரூ. 5.75 கோடிக்கும் தேர்வானார்கள். இவர்களில் சாய் கிஷோரையும் தீபக் ஹூடாவையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயன்று பிறகு தொகை அதிகமானதால் போட்டியிலிருந்து விலகியது. 

குஜராத் அணியில் ரஷித் கான் உள்ளதால் அவருக்குச் சரியான இணையாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால் குஜராத் அணியில் உள்ள ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவால் மீண்டும் பெஞ்சில் அமரவேண்டிய நிலைமை சாய் கிஷோருக்கு ஏற்பட்டது. ரஷித் கான், தெவாதியா என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில் சாய் கிஷோருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என பலரும் அஞ்சினார்கள். 

மேலும் திவேதியா பல ஆட்டங்களில் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி குஜராத்துக்கு மகத்தான வெற்றிகளை அளித்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டது. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் கிஷோர், தற்போது அணி மாறினாலும் நிலைமை மாறாமல் இருந்தது. இதனால் சாய் கிஷோர் தொடர்ச்சியாக இந்த வருடமும் பெஞ்சில் அமரவேண்டிய சூழலே இருந்தது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ள சாய் கிஷோருக்கு ஐபிஎல் போட்டியில் மட்டும் இடம் கிடைப்பது சிக்கலாக இருந்த நிலையில் லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென வாய்ப்பு பெற்றார். புணே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார் குஜராத் கேப்டன் பாண்டியா.

தனது முதல் ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் பதோனியை 8 ரன்களில் வீழ்த்தினார் சாய் கிஷோர். அடுத்த ஓவரில் மொசின் கானை 1 ரன்னில் வெளியேற்றினார். அவ்வளவுதான். 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள். இதுதான் சாய் கிஷோரின் ஐபிஎல் அறிமுகம். 

அடுத்ததாக சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடினார். எந்த அணியில் இரு வருடங்கள் சும்மா உட்கார்ந்திருந்தாரோ அதே அணிக்கு எதிராகவும் நன்றாகப் பந்துவீசினார். 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சாய் கிஷோர் நன்றாகப் பந்துவீசினார் எனp பேட்டியளித்தார் தோனி. 

ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மற்ற எல்லா குஜராத் பந்துவீச்சாளர்களும் குறைந்தது ஒரு பவுண்டரியாவது கொடுத்தார்கள். ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் ஓவர்களில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடிக்கப்பட்டன.

ஆனால் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர் பந்துவீசிய தருணத்தில் கோலியும் டு பிளெஸ்சிஸும் மிக நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சாய் கிஷோர் மிகவும் துல்லியமாகப் பந்துவீசியதால் அதற்கு மரியாதை அளிக்க வேண்டிய நிலைமைக்கு இருவரும் தள்ளப்பட்டார்கள். சிங்கிள் எடுக்கவே பெரும்பாலும் விரும்பினார்கள். இவர் பந்தை அடித்தாடுவது ஆபத்து என்பதை இருவருமே விரைவில் உணர்ந்தார்கள். இதனால் சாய் கிஷோர் 4 ஓவர்களை இருவருக்கும் வீசியும் அவர்களால் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியவில்லை.

கோலிக்கு 14 பந்துகளை வீசிய சாய் கிஷோர், 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் 54 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் கோலி. எனினும் அவரால் சாய் கிஷோரின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கோலி போன்ற மகத்தான பேட்டர் முன்பு தன் திறமையைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார் சாய் கிஷோர்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 10 ஓவர்கள் வீசியுள்ளார் சாய் கிஷோர். இரு ஆட்டங்களில் அவர் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்படவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளைக் கொடுத்தார். இந்தத் திறமையை சிஎஸ்கே பயன்படுத்திக்கொள்ளாததில் அதன் ரசிகர்களுக்கு உண்மையிலேயே வருத்தம்தான்.

குஜராத் அணியில் ரஷித் கானும் சாய் கிஷோரும் அற்புதமான கூட்டணியை அமைத்திருப்பதால் இனிமேலும் வாய்ப்பு இல்லாமல் தவிக்கவேண்டிய நிலைமை சாய் கிஷோருக்கு ஏற்படாது. பிளேஆஃப் ஆட்டங்களில் இதேபோல சிறப்பாகப் பந்துவீசினால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகவும் வாய்ப்புள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement