
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ஒருபுறம் பிரப்சிம்ரன் சிங் தூணாக நின்று அடிக்க, எதிர்புறம் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சாம் கர்ரன் 20 ரன்களிலும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களில் பெவிலியன் திரும்பிய போதிலும், ஆறு சிக்சர்கள் விளாசி பிரப்சிம்ரன் சிங் நங்கூரமாக நின்றிருந்தார். 17-வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 141 ரன்களை சேர்த்திருந்தது. அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 103 ரன்களை குவித்த பிரப்சிம்ரன் சிங்கை 18ஆவது ஓவரில் அவுட்டாக்கினார் முகேஷ்குமார்.
ஷாருக்கான் 2 ரன்களில் ரன் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 167 ரன்களை சேர்த்திருந்தது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், முகேஷ் குமார், பிரவீன் தூபே, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.