
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தொடர்க்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய இளம் அதிரடி வீரர் நமன் திர்ரும் முதல் பந்திலேயே டிரென்ட் போல்டிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவால்ட் ப்ரீவிஸும் தனது முதல் பந்தில் ஆட்டமிழந்து டிரென்ட் போல்டிடம் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்ட அனுகுமுறையில் விளையாடி வந்த இஷான் கிஷான் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ள மும்பை அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 56 ரன்களை எடுத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.