
கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 13 ரன்களுக்கும், அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப், அபிஷேக் போரால் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த கேப்டன் ரிஷப் பந்தும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மேலும் நட்சத்திர வீரர்கள் அக்ஸர் படேல் 15 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இம்பேக் வீரராக களமிறங்கிய குஷாக்ராவும் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். அதன்பின் களமிறங்கிய குல்தீப் யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.