ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பிரப்ஷிம்ரன் சிங் - ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் இங்கிலிஸ் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தர்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நெஹல் வதேராவும் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் ஷஷாங்க் சிங் 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் சிங் மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், ஐடன் மார்க்ரம் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 6 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 18 ரன்களிலும், டேவிட் மில்லர் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலினுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி - அப்துல் சமத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அப்துல் சமத் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆயூஷ் பதோனி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
இறுதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனியும் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 74 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஆவேஷ் கான் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now